Wednesday 20 November 2019

தி ஃபேமிலி மேன் - வெப்சீரீஸ் விமர்சனம்


தை:
அரசின் கட்டுப்பாட்டில் ரகசியமாக இயங்கும் சில துறைகள் உண்டு, அது போன்ற ஒரு துறையான டாஸ்க்கில் ஒரு ரகசிய ஏஜென்டாக பணிபுரிபவர்  ஸ்ரீகாந்த் திவாரி, இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் என்று அழகான குடும்ப பின்னணி உண்டு. ரகசியமாக இயங்கும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்து அவர்கள் சதித்திட்டங்களை செயல்படுத்தும் முன்பே அதை தடுத்து நிறுத்துவது தான் டாஸ்க்கின் முக்கியமான பணி. இந்த பணியில் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது, எந்த நேரத்திலும், தீவிரவாதிகளால்  உயிருக்கு ஆபத்து நிழல் போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த ரிஸ்க்கான வேலையில் இருப்பதை குடும்பத்திற்கு மறைத்து அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்ப்பதாக குடும்பத்தினரிடம் கதைவிட்டு, நிஜத்தில் தீவிரவாத குழுக்களின் சதித்திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதே தி ஃபேமிலி மேன் - வெப்சீரீஸின் கதை. டெல்லியை குறி வைக்கும் ஒரு பெரும் தீவிரவாத தாக்குதலை தடுக்கும் நோக்கத்தில் துவங்கும் தீவிவாத வேட்டையானது டெல்லியில் துவங்கி காஷ்மீர், பலோசிஸ்தான், குவெட்டா என்று பயணித்து மீண்டும் டெல்லியில் வந்து முடிகிறது.



இந்த கதையில் கதாநாயகனான ஸ்ரீகாந்த் திவாரியின் மனைவியாக வரும் சுச்சி கதாபாதிரத்தில் பிரியாமணி, அரைத்த மாவையே அரைக்கும் பேராசிரியர் வேலையை விட்டு விட்டு தன் நண்பனின் ஸ்டார்ட் அப்பில் இணைந்து பணிபுரிய விரும்பும் சுச்சி,  இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் வழக்கமாக நடுத்தர குடும்பங்களில் வரும் மோதல்கள், பள்ளி செல்லும் டீனேஜ் மகளின் தவறான நட்புகளால் வரும் இடர்கள் என்று சீரீஸ் முழுவதும் வரும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக கதையை நகர்த்த உதவி இருக்கிறது.  

மனோஜ் பாஜ்பாயின் அசர வைக்கும் இயல்பான நடிப்பு: 
தீவிரவாதிகள் என்று நினைத்து சில கல்லூரி மாணவர்களை சுட்டு பிடிக்க முயலும்போது, அப்பாவிகளான அவர்கள் இறந்துவிட பின்னர் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று தெரியும்போது முகத்தில் தெறிக்கும் குற்ற உணர்வு, டீனேஜ் மகளின் ஆண் நண்பர்களை யார்? அவர்கள் எப்படிபட்டவர்களோ? என்று அறிந்து கொள்ள துடிக்கும் போதும் முகத்தில் காட்டும் தவிப்பு, தன் மனைவி வழி தவறி செல்கிறாளோ என்று சந்தேகப்பட்டு அவளை பின் தொடர்ந்து கண்காணித்து அவளிடம் காட்டும் எரிச்சல் என்று மனோஜ் பாஜ்பாயின் நடிப்பு பசிக்கு சீரீஸ் முழுவதுமே நிறைய தீனி போடப்பட்டிருக்கிறது. 

வில்லனாக வரும் நீரஜ் மாதவின் நடிப்பு அசத்தல் ரகம்:
கதையின் ஆரம்பத்தில் கடற்படையினர் கையில் சிக்கும் ஐஸ்ஐஸ் தீவிரவாத குழுவிவில் அங்கம் வகிக்கும் மூஸா என்பவனை பிடிக்கும் போது, குண்டடிபட்டு காயமடையும் அவனை மருத்துவமனையில் வைத்து  சிகிச்சையளிக்கும் போது அப்பாவி போல் நடிக்கும் அவனது உண்மை முகம் தெரிகிறது, தப்பிக்க முயலும் அவனை மீண்டும் பிடிக்க முற்படும் போது நடக்கும் அசம்பாவிதங்கள், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் வெப் சீரீஸ் என்பதை மறந்து ஒரு சினிமா பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகிறது. அப்பாவி போல் நடித்து பின் தன கோரமுகத்தை காட்டும் தீவிரவாதி மூசாவாக நடித்திருக்கும் நீரஜ் மாதவின் நடிப்பு அசத்தல் ரகம்.

சீரியசான கதையில் இடையில் வரும் சில சிறிய கதாபாத்திரங்களிடம் மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவர் கூடவே பயணிக்கும் அலுவலக நண்பரான ஷரிப் ஹாஷ்மி பேசும் வசனங்கள் சீரியஸ்னஸ் மறந்து நம்மை சிரிக்க வைக்கிறது, உதாரணத்திற்கு, ஆபிசர் அலுவலகத்திற்கு ஏன் லேட்டாக வருகிறீர்கள் என்று போனில் கேட்க மனோஜ் பாஜ்பாயி தான் சாப்பிட்டு கொண்டிருக்கும் வடா பாவ் விற்பவனையே - அவனை கண்ணெதிரே பார்த்து கொண்டே அவன் விபத்தில் இறந்து விட்டதாக கதை விடுவது, பிள்ளைகளிடம் ஸ்கூலுக்கு காரில் பயணிக்கும் போது நடக்கும் உரையாடல்கள் எல்லாம் வெடிசிரிப்பை வரவழைக்கிறது, அதுவும் அந்த பொடியன், தன் அப்பா ஒருவனை சாத்துவதை கண்டுவிட அதை அம்மாவிடம் சொல்லாமல் இருக்க பீஸா. ஐஸ்க்ரீம் என்று ஒவ்வொன்றாக அப்பாவையே பிளாக்மெயில் செய்து வாங்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு ரகம். இந்த இடங்களில் எல்லாம் வசனம் எழுதியுள்ள சுமித் அரோராவின் வசனங்கள் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. 

ராஜ் மற்றும் டி கே யின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் தி ஃபேமிலி மேனை ஆக்சன் த்ரில்லர் கலந்த சுவாரஸ்யமான குடும்ப கதை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 29 October 2019

அங்கூர் அரோரா மர்டர் கேஸ் - திரைவிமர்சனம்


சில திரைப்படங்கள் மிகவும் நல்ல கருத்தியலை கொண்டதாகவும், சலிப்பு தட்டாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் காட்சியமைப்புகளுடனும் சிறப்பாக இருக்கும், ஆனால் ஏதோ சில காரணங்களினால் அந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையாமல், ரசிகர்களிடம் சரியாக சென்றடையாமல் இருக்கும், அத்தகைய நல்ல திரைப்படங்களை இணையத்தில், தொலைகாட்சியில் காணும்போது இவ்வளவு நல்ல திரைப்படம் ஏன் வெற்றியடையாமல் போனது என்று நம் மனதில் கேள்விகள் எழும், அப்படி மக்கள் மனதில் சிந்திக்க தூண்டும் நல்ல கருத்தியலை கொண்ட திரைப்படம் தான் இந்தி மொழியில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த அங்கூர் அரோரா மர்டர் கேஸ். 

கதை: ஒரு பெயர்பெற்ற மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனையில் ஒரு சிறுவனுக்கு குடல்வால் நீக்க அறுவை சிகிச்சையின்போது அலட்சியத்தினால் செய்யும் ஒரு சிறு தவறால்  அந்த சிறுவன் (அங்கூர் அரோரா) உயிரிழந்துவிட அதை மூடிமறைத்து  சிறுவனின் மரணத்திற்கு தான்  காரணமில்லை, அது நுரையீரல் செயலிழப்பினால் ஏற்பட்டது என்று ஜோடிக்கிறார். ஆனால் அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை செய்யும் இளைஞர் - கதாநாயகன் - அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இன்னொரு பயற்சி மருத்துவரான தன் காதலியின் உதவியோடு உண்மையை தெரிந்து கொண்டு உயிரிழந்த சிறுவனின் தாய்க்கு சட்டத்தின் மூலம் நீதி கிடைக்க செய்ய போராடுகிறார், இந்த சட்டப்போராட்டத்தின்போது அந்த புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் குறுக்கு வழியில் தனக்கு எதிராக இருக்கும் சாட்சிகளை மிரட்டி தனக்கு ஆதரவாக மாற செய்வது, முக்கிய சாட்சியாக வர இருக்கும் ஒரு  ஆய்வக அறிக்கையை தயாரித்த ஆய்வகத்தில்  சேமிக்கபட்டிருக்கும் சாம்பிளை ஆள் வைத்து அழிப்பது என்று சூழ்நிலை காரணமாக வில்லத்தனத்தின் மொத்த உருவமாக மாறுகிறார், இவ்வளவு செய்தும் அந்த உண்மையை மறைக்க முடிந்ததா? அல்லது அவர் செய்த தவறு வெளிவந்து தண்டிக்கப்பட்டாரா? என்பதை மிகவும் சுவாரஸ்யமாக படமாக்கி இருக்கின்றனர்.

உயிர்களை தான் சிகிச்சை செய்து காப்பாற்றுவதால் தன்னைத்தானே கடவுளாக நினைக்கும் தலைகனம் கொண்ட மருத்துவராக கே கே மேனன், தானே மிகசிறந்த மருத்துவர் என்று தன் சக மருத்துவர்களிடமும் பயிற்சி மருத்துவர்களிடமும் தன் ஈகோவை அடிக்கடி வெளிப்படுத்தி  வெறுப்பை சம்பாதிக்கிறார், அறுவைசிகிச்சை முடிந்ததும் தன் மகனின் வயிற்றுவலி நீங்கிவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருந்து தன் மகனை இழந்து வாடும் தாயாக திக்சா சோப்ரா, இவர் தன் கணவனை பிரிந்து வேலைக்கு சென்று தன் மகனை காப்பாற்றுவதாக காணபிக்கப்படுவதால் ஆரம்பம் முதல் இறுதிவரை இயல்பாகவே இவர் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் நிழலாடுகிறது. இளம் பயிற்சி மருத்துவராக வரும் அர்ஜுன் மாத்தூர் சிறுவனின் மரணத்தில் இருக்கும் உண்மையை தெரிந்த தன் காதலியிடம் சாட்சியாக மாறச் சொல்லி கெஞ்சுவதும், ஆனால் உண்மையை வெளியே சொன்னால் அதனால் வரும் பின்விளைவுகளை நினைத்து கலங்கி சாட்சியாக மாற மறுக்கும் காதலியாக விகாஷா சிங், 

இரட்டை வாழ்க்கை வாழும் வக்கீலாக காண்பிக்கப்படும் பவொலி டாம் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை தூண்டும்படி இருந்தாலும், போகப்போக இவருக்கு எதிர்த்தரப்புக்கும் இடையே நடக்கும்  நீதிமன்ற விவாதங்களில் ஜொலிக்கிறார். சட்டப் போராட்டத்தில் கடைசி நம்பிக்கையாக இருக்கும் ஆய்வக அறிக்கையும் அழிந்த பிறகு இனி எல்லாம் முடிந்தது அவ்வளவுதான் என்று நினைக்கும்போது வரும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் நீதியை நிலைநாட்டுகிறது. 

எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் இருப்பதாக காட்டப்படும் அதே வேளையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தவறு செய்யும் குற்றவாளிகள் எவ்வளவு எளிதாக தப்புகின்றனர் என்றும் காண்பித்திருக்கின்றனர் . எளிய மக்கள் நீதிக்காக போராடும்போது எவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது, ஒரு உண்மையை நீதிமன்றத்தில் நிரூபித்து நீதியை பெற எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்று அங்கூர் அரோரா மர்டர் கேஸ் திரைப்படம் மூலம் வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குனர் சுஹைல் தட்டாரி. 

திரைப்படம் பின்வரும் இணைப்பில் யூ டியூபில் பார்க்க: இங்கு கிளிக் செய்க
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 26 October 2019

கைதி - திரைவிமர்சனம்


தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்துள்ளது, பி நாராயணபுராவில் உள்ள புஷ்பாஞ்சலி திரையரங்கத்தில் மேட்னி ஷோவில் கைதி திரைப்படத்தை இன்று பார்த்தேன். (விமர்சனம் சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்டுள்ளது)

கதை: இந்தப் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுவென்று செல்கிறது. கதை என்று பார்த்தால் பல நூறு கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி அதை ரகசியமாக வைத்திருக்கும் போலீசார், அந்த போலீசாரில் தங்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் சிலரை கொன்றுவிட்டு போதைப் பொருட்களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போதை கும்பல் தலைவனையும் விடுவிக்கத் துடிக்கும் கொலை வெறி பிடித்த போதை ரவுடி கும்பல், அவர்களிடமிருந்து சூழ்நிலை காரணமாக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தன் சக காவலர் குழுவை மருத்துவமனையில்  சேர்த்து உயிரை காப்பாற்ற துடிக்கும் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி,  ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து பத்து வருடங்களாக தன் மகளைப் பார்க்க முடியாமல்  தவித்து சிறையிலிருந்து மகளை பார்க்கும் ஆவலுடன் வெளிவரும் கார்த்தி, இந்த கொலை வெறியுடன் திரியும் போதை கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையில் சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொள்கிறார், அனாதை இல்லத்தில் தன்னை பார்க்க வரும் யார் என்றே தெரியாத ஒரு உறவை ஆர்வத்துடன் பார்க்க காத்திருக்கும் கார்த்தியின் மகள், இவரை கார்த்தி சந்தித்தாரா போதை கும்பலிடம் இருந்து போலீஸ் குழுவினரை கார்த்தி காப்பாற்றினாரா? என்பதை ஆக்சன் சரவெடியோடு  ரசிகர்களுக்கு  தீபாவளி விருந்தாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் கேமரா கோணங்களிலும் ஹாலிவுட் படங்களைப் போன்று இந்த படத்தை எடுத்துள்ளனர். படம் முழுவதும் இரவு நேரத்திலேயே கதை நடப்பதால் முழுக்க முழுக்க இருட்டு பின்னணியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் சீரியஸான திரைக்கதை கொண்ட படமென்றாலும் இடையில் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் சில வசனங்கள் அந்த பரபரப்பையும் மறந்து சிரிக்க வைத்து விடுகிறது உதாரணத்திற்கு டிரங்கன் டிரைவ் செய்து போலீசாரிடம் மாட்டிக் கொள்ளும் கல்லூரி மாணவர்களிடம் இன்ஜினியரிங் படிச்சவங்களா இப்படி குடிக்கிறீங்க? என்று கேட்கும் போலீசாருக்கு இன்ஜினியரிங் படிச்சதனால தான் சார் இப்படி குடிக்கிறோம் என்று கல்லூரி மாணவர்கள் பதில் சொல்லும்போது  தியேட்டரில் சிரிப்பலை. இதுபோன்று படம் நெடுகிலும் அங்கங்கே சில வசனங்கள் சிரிப்பையும் சில வசனங்கள் சுரீரென்று மனதை தைக்கும்படியும்  இருக்கிறது. பத்து வருஷத்துல நிறைய மாறிடுச்சு பாருங்க முன்னாடி எல்லாம்  போலீஸ் தான் மக்களை காப்பாத்துவாங்க இப்ப போலீஸ  நம்ம காப்பாத்த வேண்டியதா இருக்கு என்று கார்த்தியிடம் கேட்டரிங் பையன் சொல்லும் இடம் நச் ரகம் . 

லாரியை ரவுடி கும்பல் மறித்து தாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் கார்த்தி களத்தில் இறங்கி ரவுடிகளை அதகளம் செய்யும் காட்சி காட்சிகள் அசத்தல் ரகம், கிளைமாக்சிலும் மீண்டும் அடிதடி காட்சி தானோ என்று நினைக்கும் வேளையில் எதிர்பாராத டிவிஸ்ட் ஆக வரும் கிளைமாக்ஸ் காட்சியமைப்பு அதிரடியாக இருக்கிறது.

டில்லியாக படம் முழுக்க லாரி ஓட்டிக் கொண்டே வழியில் வரும் ரவுடி கும்பல்களை அதகளம் செய்யும் கார்த்தி,  நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நரேன் (பிஜோய்), நான்கு கல்லூரி மாணவர்களை மட்டும் கமிஷனர் ஆபிஸுக்குள் வைத்து கொண்டு லாக்கப்புக்கு உள்ளேயும், கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியேயும் மிரட்டும்  ரவுடி கும்பலுக்கு தண்ணி காட்ட பயத்துடன், பதட்டத்துடன் முயற்சிக்கும் நெப்போலியன் கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியான் என்று எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். எந்த தடங்கலுமில்லாமல் நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை, படத்தில் எந்த ஒரு காட்சியும் தேவையில்லை என்று ஒதுக்க முடியாதபடி எடிட் செய்யப்பட்டுள்ள பிலோமின் ராஜின் நேர்த்தியான  எடிட்டிங், இருட்டான காட்சியமைப்புகளையும், ஆக்சன் அதிரடி காட்சிகளையும் லாவகமாக கேமராவுக்குள் சுருட்டி நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு , ஒரு ஆக்சன் படத்திற்கு தேவையான அதிர வைக்கும் பின்னணி இசையை தந்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இயக்கி சிறந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படத்தை தந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள். படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் கிடையாது, நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் ஒரு முழுநீள ஆக்ஷன் த்ரில்லர் படம் பார்த்த  திருப்தி. 

ஹாட்ஸ் ஆஃப் லோகேஷ் கனகராஜ் & டீம்.
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 25 October 2019

பிகில் - தீபாவளி - ரசிகர்கள் கொண்டாட்டம் - தியேட்டர் ரிப்போர்ட் பெங்களூரிலிருந்து


பெங்களூரில் பிகில் திரைப்படம் - தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய பிகில் தீபாவளி - மற்றும் படம் பார்த்துவிட்டு வந்தவர்களின் விமர்சனம். #Bigil, #பிகில்
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 21 August 2019

கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0


90'ஸ் கிட்ஸ்களுக்கு அவர்களின் காலத்து நகைச்சுவை சீரியல்கள் ஏதாவது  சிலவற்றை சொல்லச் சொன்னால் அதில் ரமணி vs ரமணி 
என்ற சீரியல் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். ஒரு கணவன் மனைவி, அவர்களின் சுட்டி பெண் குழந்தை இவர்களுக்கிடையே அவ்வப்போது சில சில்லறை சண்டைகளை மூட்டி விடும் உறவினர்கள், இதர கதாபாத்திரங்களை வைத்து கொண்டு அரை மணி நேரம்  - நேரம் போவது தெரியாமல் சிரிக்க வைக்க சீரியல் அது. 

மேலே சொன்ன சீரியலில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் ஏதாவது சில சில்லறை விஷயங்களை செய்துவிட்டு அதனால் ஏற்படும் எதிர்பாராத பின்விளைவுகளால் பாதிக்கப்படும்போது அசடு வழிவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட அதே அசடு கணவன் மனைவி டைப் (சீரியல் இல்லை) - வெப் சீரிஸ்  தான் இப்போது வெளிவந்திருக்கும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0 இந்த வெப் சீரிஸில் கணவனான செந்தில் மட்டுமே அசடாக வருகிறார், மனைவி ஸ்ரீஜா கொஞ்சம் புத்திசாலியாக தோன்றுகிறார், 

ஆறு எபிசோடுகள் கொண்டிருக்கும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0 வெப் சீரிஸில் நம்மை சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் சில நல்ல கருத்துக்களை அங்கங்கே அள்ளி தெளித்திருக்கிறார்கள் (எ.கா) அதீத ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கண்டிக்கும் விதத்தில் ஒரு எபிசோடு நகைச்சுவை கலந்து எடுக்கப்படிருப்பது நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது, ஆனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கட்டுபடுத்துவது எல்லாம் இந்நாளில் நடக்கிற காரியமா என்று தெரியவில்லை, ஏனென்றால் இந்த வெப் சீரிசையே பல ரசிகர்கள் ஸ்மார்ட்போனில் தான் பார்த்து கொண்டிருப்பார்கள். 

லாஜிக் எல்லாம் பார்க்காமல் அரை மணி நேரம் சிரிக்க விரும்புவர்கள் தாரளாமாக ஒரு முறை பார்த்து சிரித்து மகிழுங்கள். 
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 11 October 2018

ராட்சசன் - திரைவிமர்சனம்



முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படம், முதல் படத்தில் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், இந்த படத்தில் நம்மை அதிர வைத்திருக்கிறார். நகரத்தில் வரிசையாக பள்ளி மாணவிகள் கடத்தப்படுகிறார்கள், மாணவிகள் கடத்தப்பட்ட இரண்டாம் நாளில்,  மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு  இறந்த நிலையில் அவர்களின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், சினிமாவில் இயக்குனராக முயற்சிக்கும் விஷ்ணு விஷால், ஒரு சைக்கோ கொலைகாரனின் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் உலகம் முழுவதும் நடந்துள்ள பல சைக்கோதனமான தொடர் கொலைகள், சைக்கோ கில்லர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது சைக்கோதனமான நடவடிக்கைகள், அவர்கள் ஏன் அப்படி சைக்கோவாக மாறினார்கள் போன்ற தகவல்களை சேர்த்து வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கி, அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கேட்கிறார்.



எவ்வளவோ முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்காததால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் உறவினர் சிபாரிசில் கிடைக்கும் காவல் துறை பணியில் சேர்கிறார். அப்போது நடக்கும் சைக்கோதனமான தொடர் கொலைகளில் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை உயர் அதிகாரிகள் திணற, புதிதாக வேலைக்கு சேரும் விஷ்ணு விஷால் தான் ஏற்கெனவே திரைப்படம் எடுப்பதற்காக சேகரித்து வைத்துள்ள சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய தகவல்களோடு ஒப்பிட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் துப்பறியும் த்ரில்லர் கதை. 

விஷ்ணு விஷாலின் சகோதரி மகள் படிக்கும் வகுப்பு ஆசிரியையாக வருகிறார் அமலா பால், அக்கா மகளுக்காக விஷ்ணு விஷால் ரிப்போர்ட் கார்டில் அப்பா போல் கையெழுத்து போட்டு அமலா பாலிடம் மாட்டிகொள்ளும் போது விஷ்ணு விஷாலையே அப்பாவாக நடிக்க சொல்லி அழைத்து வந்து, இறுதியில் கையும் களவுமாக அமலா பாலிடம் சிக்கி வழியும் காட்சிகள், அமலா பால் வளர்க்கும் குழந்தை சூப்பர் மார்கெட்டில் சிசிடிவி இருப்பது தெரியாமல் செய்யும் பேனா, ஸ்கெட்ச் என்று சுட்டு டிரெஸ்சுக்குள் மறைத்து வைத்து கொள்ள, அது தெரிந்து விஷ்னு விஷால் பணம் செலுத்தி விட்டு செல்லும் காட்சிகள் எல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறது. 




மிகவும் விறுவிறுப்பாக செல்லும் த்ரில்லர் கதையின் இடையில் எதிர்பாராத திருப்பமாக கதாநாயகனின் சொந்த சகோதரி மகளும் (பள்ளி மாணவி) சைக்கோ கொலைகாரனால் கொல்லப்படுகிறார். வெறி கொண்டு கொலைகாரனை தேடி புறப்படும் விஷ்ணு விஷாலுக்கு தடைகற்களாக வழக்கமாக எல்லா துறைகளிலும் இருக்கும் சீனியர், ஜூனியர் ஈகோ பிரச்சினை வருகிறது, உயர் அதிகாரியாக வரும் பெண் அதிகாரி விஷ்ணு விஷாலுக்கு தன்னை விட அதிக திறமை இருப்பது தெரிந்தவுடன் அவரை மட்டம் தட்ட "உன் சினிமா கதையெல்லாம் இங்க வந்து சொல்லாதே போய் சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வா" என்று சக காவலர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி துரத்துவது, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விஷ்ணு விஷாலை மட்டம் தட்டி பேசுவது என்று தன் அதிகார பலத்தை காண்பித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். 

# மீ டூ - ஹேஷ் டாக் வைரலாகி வரும் நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு வேலியாய் இருக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு டார்ச்சர் தருவதை காண்பித்து குற்றவாளி இவர் தான், குற்றவாளியை மடக்கி பிடித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் இருக்கும்போது மீண்டும் மாணவிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுவது எதிர்பாராத டிவிஸ்ட். சைக்கோ கொலையாளியிடம்  சிக்கி கொள்ளும் மாணவி, தான் கொல்லப்பட போவது அறிந்து பாத்ருமூக்குள் நுழைந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு கண்டு வந்து உட்கார வைக்கும் திக் திக் ரகம். 

இடைவேளைக்கு பிறகு காட்டப்படும் அந்த கொடூர சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரம் அதிர வைக்கிறது, அவன் ஏன் அப்படி மாறினான் என்பதற்காக காண்பிக்கப்படும் ஃப்ளாஷ்பேக் கதை விழிகளில் கண்ணீரை வர வைக்கிறது, விஷ்ணு விஷாலின் சகோதரி கணவராக வரும் முனீஸ்காந்த், போஸ்ட் மார்டம் செய்யும் மருத்துவராக வரும் நிழல்கள் ரவி. விஷ்ணு விஷாலின் கூட பணிபுரியும் காவலராக வந்து சைக்கோ கொலைகாரனால் கொல்லப்படும் காளி வெங்கட் என்று எல்லோரும் தங்கள் பங்கை நிறைவாக  செய்திருக்கிறார்கள், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேகமாக செல்லும் கதையின் விறுவிறுப்புக்கு காமெராவும், இசையும் (கிப்ரான்) துணை புரிகிறது. 

திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரும், பள்ளி மாணவிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஒரு நல்ல சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் திரைப்படம் தந்ததற்காக ராம்குமார் & டீமுக்கு ஒரு சபாஷ் போடலாம். 

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர் - தமிழர் டைம்ஸ்

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 6 October 2018

நோட்டா - திரை விமர்சனம்


ன்றைய  அரசியல் களத்தில் நடைபெறும் கேலிகூத்தான பல நிகழ்வுகளை கொஞ்சம் நையாண்டியும், நிறைய சமூக அக்கறையும் கலந்து கொடுத்தால்  சினிமா ரசிகர்கள் கொண்டாட மாட்டார்களா என்ன? 

முதல்வராக இருக்கும் நாசர் ஒரு ஊழல் வழக்கில் சிக்கி கொள்ள, வழக்கின் தீர்ப்பு வெளிவரும் முன்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு (தன் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லோரையும் ஒதுக்கி விட்டு) சொந்த மகனை (விஜய் தேவரகொண்டா) முதல்வராக பதவியேற்க செய்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர் ஒரு போலி சாமியார். 

குடியும் கூத்துமாக ப்ளேபாய் போல் பார்ட்டி டான்ஸ் என்று ஊர் சுற்றி திரியும் கதாநாயகனுக்கு  (விஜய் தேவரகொண்டா), திடீரென்று ஒரு நாள் இரவில் யானை மாலை போட்டு ராஜா ஆவது போல் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு கிடைக்க, அதன் பின்னர் அவர்  சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளை சாதுரியமாக முறியடித்து மக்கள் செல்வாக்கையும் பெற்று சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்ந்து முதல்வராக இருந்து மக்களுக்கு நன்மை செய்ய முயலும் கதை.



ஊழல் வழக்கில் தன் தந்தைக்கு ஐந்தாண்டு சிறை என்று தீர்ப்பு வர, சொந்த கட்சிக்காரர்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தை நிறுத்த பொங்கி எழுந்து கொடுக்கும் புத்திசாலித்தனமானமிரட்டும் பேட்டி, அந்த பேட்டியால் கிடைக்கும் ரவுடி சிஎம் பட்டம், மழை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட நகருக்குள் மக்கள் உயிருக்கு சேதம் ஏற்படாமல் காப்பற்ற இளைஞர்கள் துணையோடு எடுக்கும் அவசர கால நடவடிக்கை, நாயகன் இடைத்தேர்தலில் வெல்லும் வாய்ப்பை தட்டி பறிக்க எதிர்க்கட்சி வெளியிடும் அந்தரங்க வீடியோவை விளம்பர படம் என்று சொல்லி தப்பிப்பது என்று நன்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபத்திரத்தில் அதிரடியாக நடித்து கலக்கி இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

ஸ்டிக்கர் பாலிடிக்ஸ், ரிசார்ட் கூத்துகள், அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் செய்யும் சாமியார், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சமகால அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவை நம் கண்களுக்கு முன் கொண்டு வருவதில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் துணையுடன் விஜய் தேவரகொண்டா வெற்றி பெற்றிருக்கிறார்.      

கதாநாயகனுக்கு சரியான நேரத்தில் அனுபவ ஆலோசனைகளை சொல்லி அவரை வழிநடத்தும் மூத்த பத்திரிக்கையாளராக சத்யராஜ், அங்கங்கே தனக்கே உரிய நையாண்டி கலந்த நச் வசனங்களுடன் அப்ளாஸ்களை அள்ளுகிறார். அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவராக நாசர் ஜொலிக்கிறார். தன் மனைவி சொன்ன வார்த்தையால் தன் சொந்த மகனையே தன் வாரிசு தானா என்று சந்தேகித்து வெறுப்புடன்நடத்துவது, தன்னை பின்னுக்கு தள்ளி விட்டு முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து இருக்க விரும்பும் மகனை அன்பொழுக பேசுவது போல் நடித்து கவிழ்க்க முயல்வது என்று குள்ளநரித்தனம் செய்யும் நிஜ அரசியல்வாதியாகவே நமக்கு தோன்றுகிறார் நாசர். நாசருக்கு கட்சியில் அடுத்த நிலையில் உள்ளவராக வரும் எம் எஸ் பாஸ்கர் அளவாக பயன்படுத்த பட்டிருக்கிறார்.  எதிர்கட்சி தலைவர் மகளாக வந்து நாயகனுக்கு சவால் விடும் காரெக்டரில் நடித்திருப்பவர் - சரியான தேர்வு. 

நாசர் - சத்யராஜ் இடையே வரும் அந்த கடந்த கால பிளாஷ்பேக் கொஞ்சம் எதிர்பாராத ட்விஸ்ட் தான், நாசர் செய்யும் ஊழல்களை எதிர்த்து பத்திரிக்கையில் எழுதும் சத்யராஜ், அவர் மகனுக்கு எப்படி நண்பராகி அரசியல் ஆலோசனைகள் சொல்கிறார் என்று தெரியவில்லை. சில காட்சிகளில் வரும் இடங்கள் செட் தான் என்று தெரியும் வகையில் எடுத்திருப்பது போன்ற சில மைனஸ்கள் இருந்தாலும் சுவாரஸ்யமான கதையோட்டத்தால் அது பெரிதாக தெரியவில்லை.

நோட்டா - ரசிகர்கள் தவறாமல் (பார்க்க) வாக்களிக்க வேண்டிய வேட்பாளர் தான்.

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர் - தமிழர் டைம்ஸ்

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்